என் ஈமான் நழுவிப் போகிறதா?
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு. எப்படி ஆரம்பிப்பதுன்னு தெரியல. எல்லாரும் என்னை பக்தியான சகோதரியா பாக்குறாங்க-நான் எந்தத் தொழுகையையும் விடறதில்ல, குர்ஆன் மனப்பாடம் பண்றேன், தஹஜ்ஜுத்துக்கு எழுந்திருக்கேன், அடக்கமா உடை அணியறேன். ஆனா சமீப காலமா, உள்ளுக்குள்ளே மொத்தமா காலியா இருக்கற மாதிரி உணர்றேன். வெளியில பார்வைக்கு மத சம்பந்தமா காட்றதுபோல இருந்தாலும், என் மனசு அதுக்கு ரொம்ப தூரமா இருக்கற மாதிரி தோணுது. ஒரு காலத்துல இஸ்லாமிய பேச்சுக்கள் என் கண்கள குளமாக்கும், அப்படியே உறுதியான நம்பிக்கையோடு துஆ செய்வேன்-நான் கேட்டது எனக்கு கிடைக்காட்டியும், குறைஞ்சது நன்மை கிடைக்குதேன்னு திருப்தியா இருக்கும். நிறைய பழக்கங்கள விட்டிருக்கேன்: மேக்கப் போடுறது, மியூசிக் கேக்கறது, இப்ப அடக்கமான உடைகள அணிய ஆரம்பிச்சிட்டேன். மிகவும் கடினமான முடிவு உயிருள்ள உருவங்கள் வரைவதை விட்டதுதான். அது தான் என் சிறப்பு-படிச்சேன், கத்துக் கொடுத்தேன், அதுலயே ஒரு வாழ்க்கையை உருவாக்க திட்டம் போட்டுட்டு இருந்தேன். ஆனா ஒவ்வொரு முறை ஒரு மனுஷ உருவம் வரையும்போதும் மனசாட்சி உறுத்தும். இது பத்தி விசாரிச்சப்ப, இது ஹராம்னு புரிஞ்சது, அதனால குடும்பத்துக்கு சொல்லாமலே அமைதியா அத விட்டுட்டேன். அவங்க என்னை கல்லூரி படிப்புக்கு நிதி உதவி பண்ணி இருக்காங்க, கலை பொருள்கள் கூட வாங்கி கொடுத்திருக்காங்க. அல்லாஹ்வுக்காக எனக்கு பிடிச்ச கிட்டத்தட்ட எல்லாத்தையும் விட்டதால, உள்ளூர காலியா இருக்கற மாதிரி உணர்றேன்-இருந்தாலும், இந்த வெறுமை ஷைத்தானோட வஸ்வாஸா இருக்கும்னு நெனைக்கேன். இத விட சிறந்ததை அல்லாஹ் எனக்கு கொடுப்பான்னு நம்பிக்கை இருக்கு, ஆனா சில நேரங்கள்ல மிகவும் சோர்வா இருக்கேன். பொழுது போக்க என்கிட்ட எதுவுமே இல்ல: வேலை இல்ல, நெருங்கிய தோழிகள் இல்ல, கணவரும் இல்ல. இது என் ஆசைகளுக்கு எதிரான ஒரு தொடர்ந்த போராட்டம். என் மனசுக்குள்ள ஒரு குரல் கேக்குது, “சுத்தி இருக்கற எல்லாரும் ஜாலியா சந்தோஷமா இருக்கும்போது, நான் மட்டும் ஏன் என்னை அடக்கி வைக்கணும், ஏன் இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கணும்?” அதுகூட இல்லாம, சாதாரண சண்டைகள்ல கூட, என் பெத்தவங்க என்னை ஒரு முனாஃபிக்னு கூப்பிடுறாங்க. என் தொழுகையும் குர்ஆன் வகுப்புகளும் எந்த பலனும் இல்ல, நான் ஒரு “கெட்ட மகள்னு” சொல்றாங்க. இது என்னை நானே கேள்வி கேக்க வெக்குது. “நான் எல்லாத்தையும் விட்டுடனுமா? எந்த ஆன்மீக உணர்வும் இல்லையே, அப்புறம் இந்த முயற்சியெல்லாம் எதுக்கு?”னு யோசிக்க வெக்கறது. கொஞ்ச நாள் முன்னாடி நிகாப் அணியலாம்னு கூட யோசிச்சேன், ஆனா இப்ப சில சமயங்கள்ல முழு முக்காடே கழட்டி எறியற மனநிலை வருது. மனசில இருக்கறதை அப்படியே கொட்டணும்னு ஆசைப்பட்டேன். ஏதாவது அறிவுரை சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன், தயவுசெஞ்சு, உங்க துஆவுல என்னையும் மறக்காம சேத்துக்கோங்க.